Wednesday, September 3, 2008

பிள்ளையார்.. சில தகவல்கள்..!

பிள்ளையார்.. சில தகவல்கள்..!

கடைச்சங்க காலம் வரையில் கணபதியைப்பற்றி எவ்வித பாடல்களும் இல்லை. தமிழகத்துக்கு வந்த லேட்டஸ்ட் கடவுள் நம் பிள்ளையார்.

கி.பி. ஏழாம் நூற்றான்டுவரை வடநாட்டில் கொழுக்கட்டை தின்றுகொண்டு நிம்மதியாக இருந்தார் விக்நேஸ்வரர்.

வாதாபியை ஆண்ட சாளுக்கியர்கள் மீது படையெடுத்துச் சென்ற ( பிற்கால வரலாறு சிறு தொண்டர் என்று இனம்காணப்போகிற) பல்லவப்படை தளபதி பரஞ்சோதி ( எங்க மாவட்டத்துக் காரருங்கோ..!) வெற்றியோடு விநாயகரையும் தமிழகத்துக்கு கொண்டுவந்தார். அவ்வாறு கொண்டுவந்த ஐங்கரனின் உருவம் ஒன்றை தன் சொந்த ஊரான திருச்செங்காட்டாங்குடியில் (இந்த ஊர்காரங்க யாரும் இருக்கீங்களாப்பு..?) நிறுவினார். மற்றவற்றை பக்கத்து ஊர்களான திருப்புகளூரிலும், திரு ஆரூரிலும் அமைத்தார்.

வாதாபி கணபதிம் பஜே..!

அப்புறம் நம் தமிழகத்து கார்ட்டூனிஸ்டுகளுக்கும், ஓவியர்களுக்கும் எல்லாவித கெட் அப்புகளுக்கும் பொருந்திப்போகிற ஒரு மாடல் வசமாகக் கிடைத்தார்.. ஸ்பூனிலும் பால் குடித்தார்.
பிள்ளையார்பட்டியில் மூல தெய்வம் சிவபெருமானைப் பின்னுக்குத் தள்ளி ஃபேமஸ் ஆனார். ( சும்மா.. வேடிக்கைக்கு..! நம்ம ஆளை நாம கலாய்க்காமலா..?!!)


இன்றைய ஹீரோவின் சில பெயர்க் காரணங்கள்..


கணபதி: பிரமகணம், தேவகணம், பூதகணம் அசுரகணம் மனிதகணம் முதலிய சர்வ கணங்கட்கும் தலைவர்
எனப்பொருள்.

விக்னேசுவரர்; விக்கினம் என்றால் இடையூறு. விக்னேசுரர் என்றால் இடையூறு நீக்குபவர்
எனப்பொருள்.

ஐங்கரன் : விநாயகர், ஐந்து கரங்களை உடையவர். ஆதலால் 'ஐங்கரன்" என்பர்.


பிள்ளையார் சுழி : எதை எழுதத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழிபோட்டே எழுதுவர்.
பிள்ளையார் சுழி 'உ' ஒரு வட்டமும், ஒரு கோடும் இணைந்த நிலை. 0 பிந்து; --- நாதம். இது
பிள்ளையார், சிவசக்தியின் இணைப்பு என்பதை உணர்த்தும். அவரை வழிபடாமல் செய்யும் காரியம் வெற்றி
அடையாது!